இவரும் சுப்ரமணியன் தான் …! ஆனால் சுவாமி அல்ல……!! பிழைக்கத் தெரியாத ஒரு மனிதர்….!!!
Posted on திசெம்பர் 11, 2014 by vimarisanam – kavirimainthan
எனக்குத் தெரிந்து சுப்ரமணியன் என்று பெயர் வைத்த
யாரும் சோடை போனதில்லை …..!
( இந்த வார்த்தையைப் படிக்கும்போது, சிலர்
முகத்தில் புன்முறுவல் பூப்பதை என்னால்
இங்கிருந்தே பார்க்க முடிகிறது …!)
இன்று முண்டாசுக்கவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள். பாரதியைத் தெரியாதவர் யார் –
அவரைப் பற்றி நானென்ன புதிதாக எழுத …?
எனவே அவரைப்பற்றி எழுதுவதை விட,
அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட –
நம்மில் பெரும்பாலானோர் மறந்து போன –
இன்னொரு சுப்ரமணியனை இன்று நினைவு கொள்வோமே..!
சு ப் ர ம ண் ய சி வா ….!!!
சுப்ரமண்ய பாரதி, , வ.உ.சிதம்பரம் பிள்ளை ,சுப்ரமண்ய சிவா – இவர்கள் மூவரும் சமகாலத்தவர், மிக நெருங்கிய நண்பர்கள் –
தேசபக்தர்கள் – அதாவது பிழைக்கத் தெரியாதவர்கள்…!!!
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சொந்த வாழ்வில்
சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளானவர்கள்.
பாரதியையும் வஉசியை பற்றியும் அனைவரும் அறிவர். ஆனால் சுப்ரமண்ய சிவா பற்றி அதிகம்பேருக்குத் தெரியாது.
எனவே சுப்ரமண்ய பாரதியின் பிறந்த நாளான இன்று,
அவரது நண்பர் சுப்ரமண்ய சிவா பற்றி சில வார்த்தைகள்…..
“கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் பார்த்த யாரும்
டி.கே.ஷண்முகம் அண்ணாச்சி ஏற்று நடித்த இந்த
பாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள்.
( வ.உ.சி., சுப்ரமண்ய பாரதி, சுப்ரமணிய சிவா மூவரும் தோன்றும் இந்த காட்சி – எனக்கும், உங்களுக்கும் –
– மலரும் நினைவாக – ஒரு மன நிறைவிற்காக )
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் –( பாடல் காட்சி )
மிகக் குறுகிய காலமே வாழ்ந்தார் சுப்ரமண்ய சிவா.
மதுரை அருகே வத்தலகுண்டு – பிறந்த இடம்.
பிறந்ததே வறுமையில் தான் –
இலவச உணவு, இருப்பிடம் எங்கு கிடைத்ததோ –
அங்கு படிப்பு – அதாவது மதுரையிலும், திருவனந்தபுரத்திலும்…!
அக்டோபர் 4, 1884 முதல் ஜூலை 23, 1925 வரை –
– ஆக மொத்தம் 41 வருடங்கள் கூட வாழவில்லை.
இதிலும் 1908 முதல் 1922 வரையிலான 14 வருடங்களில்
பெரும்பாலான சமயங்களில் வெஞ்சிறைக்குள் தானிருந்தார்.
(1899-ல் இவருக்கு மீனாட்சி என்கிற பெண்மணியுடன்
திருமணம் நடந்தது. குறுகிய காலமே இல்லறம்.
1915-ல் மனைவியும் மறைந்தார் – இவரும் துறவறம்
பூண்டு தேசாந்திரி ஆனார் – சந்நியாசி ஆனால் சுதந்திர போராட்ட வீரர்….!!! )
சென்னையில் “ஞானபானு” என்கிற பெயரில் மாத இதழ்
ஒன்றை நடத்தினார். பாண்டிச்சேரியிலிருந்து பாரதி எழுதி அனுப்பிய பல படைப்புகள் இதில் பல்வேறு பெயர்களில் வெளிவந்தன.
சிறை அவருக்குக் கொடுத்த பரிசு வெண்குஷ்டம்.
விளைவு – பஸ், ரயில் எதிலும் பயணம் செய்ய தடை.
பெரும்பாலும் கால்நடையாகவே தமிழ்நாடு முழுதும் பயணம்.
அற்புதமாக உணர்ச்சிப்பெருக்குடன் வீராவேசமாக
உரை நிகழ்த்தக்கூடியவர் சுப்ரமண்ய சிவா.
அவரது ஆவேசமான பேச்சைக் கேட்க, அவர் போகும்
இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டனர்.
தனியே பொதுக்கூட்டம் என்று போடாமல், மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வேண்டி மக்களிடையே
சுதந்திர வேட்கையை உண்டுபண்ணிப் பேசினார் சிவா.
சுப்ரமண்ய சிவா காந்திஜியைப் போற்றினார் என்றாலும் கூட– அஹிம்சையில் முழுவதுமாக நம்பிக்கை இல்லை அவருக்கு. வெள்ளைக்காரன் அடித்தானென்றால், அடித்த கையை உடை
என்று ஆவேசத்துடன் கூறியவர் அவர்.
– இன்று போல் ஒரு வியாழன் அதிகாலை தான்- (23/07/1925) தர்மபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது ஆசிரமத்தில் சுப்ரமண்ய சிவாவின் இறுதி மூச்சு பிரிந்தது.
வாழ்ந்த காலத்தில் வ.உ.சி., பாரதி, சுப்ரமண்ய சிவா –
இந்த மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்களையுமே
தமிழகம் போற்றிப் பாதுகாக்கத் தவறியது.
மூவரும் சாகும் வரை வறுமையில் வாடினர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் துவக்க காலங்களில்,
துணிவுடன் நின்று போராடிய இந்த தியாகிகளின்
இறுதிக்காலம் மிகவும் கொடுமையாக இருந்தது.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை.
ஆனால், இன்று நாம் வாழும் இந்த சுதந்திர இந்தியா
அவர்கள் உருவாக்கிக் கொடுத்தது.
மகாகவி சுப்ரமண்ய பாரதி…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி…
சுத்த வீரன் சுப்ரமண்ய சிவா….
பாரதியின் பிறந்த நாளான இன்று
இந்த பெருந்தகைககளை நினைத்து வணங்குவோம்.
நண்பர்களே – உங்கள் வழித்தோன்றல்களுக்கு
நேரம் வாய்க்கும்போதெல்லாம் இத்தகைய தியாகிகளைப் பற்றியும், பகத் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியுமான செய்திகளைச் சொல்லிக் கொடுங்கள்.
அவர்கள் காலத்திலாவது – நல்ல மனிதர்கள்,
நல்ல அரசியல்வாதிகள் உருவாகட்டும்…..
இந்த நாடு உருப்படட்டும்.
————————————
இவரும் சுப்ரமணியன் தான் …! ஆனால் சுவாமி அல்ல……!! பிழைக்கத் தெரியாத ஒரு மனிதர்….!!! க்கு 8 பதில்கள்
1. rathnavelnatarajan சொல்கிறார்:
மகாகவி சுப்ரமண்ய பாரதி…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி…
சுத்த வீரன் சுப்ரமண்ய சிவா….
பாரதியின் பிறந்த நாளான இன்று இந்த பெருந்தகைககளை நினைத்து வணங்குவோம்.Ganpat சொல்கிறார்:
எப்பேர்பட்ட மனிதர்கள்அதுவும் செல்வந்தரான வ.உ.சி செய்த தியாகம் எப்பேற்பட்டது.. சொத்துக்களையெல்லாம் அர்ப்பணித்து செய்த போராட்டங்கள்.!! விழலுக்கு இரைத்த நீர் !
2. S.Selvarajan சொல்கிறார்:
பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப சுப்ரமண்ய சிவா பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார் !
— நாட்டுப்பற்றூம் மூவரின் தியாக உணர்வும்தான் —- சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொ ண்டது. இவர்களின் சுதேச உணர்வை தன் ‘சுதேச கீதங்களால்’ பாரதியார் தூண்டிவிட்டார் . இம்மூவரையும் இந்த நந்நாளில் நினைவு கூர்ந்த
திரு கா.மை. அவர்களுக்கு நன்றி.
3. ரவிகுமார் பாஸ்கர் சொல்கிறார்:
2:12 பிப இல் திசெம்பர் 11, 2014 (மேம்படுத்து)
கா.மை. அவர்களுக்கு – தங்களுடைய சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. மனம் மிக நெகிழ்ச்சி அடைகிறது. பின்னூட்டங்களிலிருந்து தேசப்பற்று இன்னும் உயிருடன் இருப்பதை காண முடிகிறது.நன்றி.
4. Srini சொல்கிறார்:
Great article and a very timely one too.. God Bless you KM sir !!
Srini
5. D. Chandramouli சொல்கிறார்:
Dear KM,
We should ever be indebted to Sivaji Ganesan for bringing out, through his in-depth portrayals, the immense sacrifices undergone by the likes of VOC, Bharathiar, Subramania Siva, Kattabomman and Thiruppur Kumaran. I was moved to tears while watching the movie “Kappalottiya Thamizhan”.”. Of these freedom fighters, we still know very little of Subramania Siva. Thanks for remembering these stalwarts.
- yogeswaranசொல்கிறார்:
3:27 பிப இல் திசெம்பர் 12, 2014 (மேம்படுத்து)
why we tamils are suffering like this.we are an ungrateful race. the three suffered like hell.
recenlty i saw a news item V.O.Cs grand daughter did not have the fees to for engineering college.
rgs
yogi